
சுழிக்குள் இழுத்துக் கொள்கிற கதைதான். கர்புர்ரென்று திரியும் இரண்டு பெரிசுகள். தலைக்கு மேல் நாக்கோடு திரியும் இரண்டு டஜன் சிறுசுகள். இவர்களை வைத்துக் கொண்டு தமிழ்சினிமாவின் புதிய ரூட்டில் 'பெடல்' போடுகிறார் புதுமுக இயக்குனர் தாமிரா. இடையில் காதல் என்ற கிரியா ஊக்கியும் இணைந்து கொள்ள, தூரத்தை வெகு எளிதாக கடக்க வைக்கிறது திரைக்கதை. ஒரு காட்சியில் மின்னலாக வந்து போகும் 'முத்துக்குமார் நினைவு விளையாட்டு திடல்' என்ற போர்டு டைரக்டரின் இன உணர்வையும் காட்சி படுத்துவதால், தாமிரா... பிடியுங்கள் தனியாக ஒரு மெடல்! காம்ரேட் தோழர் பாரதிராஜா தெருமுனையில் கூட்டம் போட்டால் கூட, தான் டவுனுக்கு போவதை தடுப்பதற்கான சதி என்பதாக புரிந்து கொள்ளும் அளவுக்கு பகை வளர்க்கிறார் தாத்தா பாலசந்தர். அவ்வளவு ஏன்? பெரிய மனுஷன் என்ற நிலையிலிருந்து இறங்கி பாரதிராஜாவின் படம் போட்ட போஸ்டரை கிழிக்கிற அளவுக்கு மூக்கு நுனியில் முட்டிக் கொண்டு நிற்கிறது பகை. இவர்கள் வீட்டு இளசுகள் இரண்டும் எதிரெதிராக நிற்காமல் காதலில் விழுகிற போது என்னாகும் என்பது தெரிந்தே, என்னாகுமோ என்ற பதற்றத்தை வர வைக்கிறார்கள். க்ளைமாக்ஸ்தான் சற்றே நாடகத்தனம் (ஹ¨ம், கமர்ஷியல் காம்ப்ரமைஸ்) இயல்பாகவே போர்க்குணம் கொண்ட பாரதிராஜாவுக்கு பொருத்தமான கேரக்டர். இவர் பேசுகிற போதெல்லாம் பிசிறடிக்காமல் இவரது குரலாகவே ஒலிக்கிறது நல்லான் தமிழ் எழுதியிருக்கும் வசனங்கள். ஒகேனக்கலில் ஆரம்பித்து உலக விஷயங்களை எல்லாம் அலசுகிறது இவரது பேனா. பேஷ். இமயத்தின் முகத்தில் ஏராளமான உணர்ச்சி குவியல். க்ளைமாக்சில் "நான் வேணா காலில் விழட்டா" என்று கலங்குவது, கலக்கல் ஐயா. பெருத்த மீசையும் நடுங்கும் கைகளும் துடிக்கும் உதடுகளுமாக சிகரம்! இவரது கோபம் படீரென்று நகைச்சுவையாக முடிகையில் தியேட்டரே திடுதிடுக்கிறது. காரிலிருந்து இறங்கி பாரதிராஜாவின் சைக்கிளில் உள்ள காற்றை மெனக்கட்டு பிடுங்கி விடுவதெல்லாம் டூ மச் என்றாலும் குறும்பு. நடித்திருக்கும் பல குட்டீஸ்களில் இருவர் மனசை அள்ளிக் கொள்கிறார்கள். 'தோழரே...' என்று பாரதிராஜாவை கலாய்க்கும் அந்த பொடியனும், அவ்வப்போது அட்வைஸ் பொழியும் அச(த்த)ல் குஷ்புவும்! "நீ வாய மூடு. எது பேசினாலும் பிரச்சனை ஆகுது" என்கிற அதட்டலில் பொங்கி வழிகிறது சிரிப்பும், யதார்த்தமும்! ஆரி- அஞ்சலி காதலில் இனிப்பை விட துவர்ப்பே அதிகம். அந்த இளவயது பிளாஷ்பேக்கில் உச்சரிக்கப்படும் "உசிரளவுக்கு பிடிச்சுருக்கு" என்ற ஒற்றை வசனம், தாமிரா ஒரு சிறந்த சிறுகதை ஆசிரியர் என்ற கவுரவத்தை பறைசாற்றுகிறது. எதையோ நினைத்துக் கொண்டு மார்க் போடும் அஞ்சலி, "32 பெயில்" என்று எழுதுவதும், அதை ஆரியின் கைகளில் கொடுத்து கவலைப்பட வைப்பதுமாக சின்ன சின்ன ஹைக்கூக்களையும் வாரியிறைத்திருக்கிறார் இயக்குனர். படம் நெடுகிலும் சர்க்கரை தூவியது போல வரும் ஜோக்குகள் தனியாக பாராட்டப்பட வேண்டியவை.(டீச்சர் எனக்கு 83 மார்க் போட்டிருக்கீங்க. ஏண்டா, அது போதாதா? இல்ல டீச்சர். நான் பரிட்சையே எழுதல...) கருணாஸ் வருகிற காட்சிகள் எல்லாமே கிச்சுகிச்சு நிமிடங்கள். யூனிபார்மை கழற்றாமலே அதனை மறைத்துக் கொண்டு மாப்பிள்ளை காஸ்ட்யூமுக்கு மாறுகிற அவர், க்ளைமாக்ஸ் சீரியசுக்கு நடுவிலும் சிரிக்க வைப்பது ஜிலீர். பாடல்களில் சந்திரா எழுதிய 'நான் என்று சொல், இல்லை நாம் என்று சொல்' பாடலும், அந்த ட்யூனும் சூப்பர் ஹிட் ஆகக்கூடும். மற்றபடி கார்த்திக் ராஜாவின் வருகையில் ஆர்ப்பாட்டமில்லை. செழியனின் ஒளிப்பதிவு கிராமத்தில் ஒரு சிம்லா! 'உசுரளவுக்கு பிடிச்சிருக்கு'ன்னு சொல்ல ஆசைதான், ஆனா...! - |
No comments:
Post a Comment