
சிங்கப்பூர் தொழில் அதிபர் நிழல்கள் ரவி மகன் பரத். ரெஸ்டாரண்ட் நடத்துகிறார். அவருக்கு மடால்ஷாவை திருமணம் பேசி முடிக்கின்றனர். இந்தியாவில் இருந்து ஸ்குவாஷ் விளையாட வந்த சனாகானுடன் காதல் வயப்பட்டு திருமணத்துக்கு மறுக்கிறார். ஆத்திரமாகும் சனாகான் தந்தை பரத் அனாதை என்ற உண்மையை போட்டு உடைக்கிறார்.
அதிர்ச்சியாகும் பரத் பெற்றோரை தேடி தமிழகம் வருகிறார். இங்கு சனாகானை சந்தித்து மீண்டும் காதல் வளர்க்கின்றனர். சனாகான் தந்தை ரஞ்சித் காதலை எதிர்ப்பதுடன் பரத்தை தீர்த் துக்கட்ட திட்டம் போடுகிறார். இன்னொரு தாதாவான பிரபுவும் பழைய பகையாளி நிழல்கள் ரவி மகன் தான் பரத் என உணர்ந்து ஆட்களை ஏவுகிறார். இவர்களிடம் இருந்து பரத் எப்படி தப்புகிறார். தந்தையை கண்டு பிடித்தாரா? என்பது கிளைமாக்ஸ்.
பரத் நடிப்புக்கு தீனி போட்டுள்ள படம். ஓட்டலில் விவேக்குடன் செய்யும் காமெடி கல கலப்பு. அனாதை என்று இழிவுப்படுத்தும் போது நிழல்கள் ரவி விடம் உண்மை என்று பதறும்போது உருக வைக்கிறார். சனாகானுடனான பிளாஷ்பேக் காதல் கல கலப்பு... பாஸ்போட்டை பதுக்கி போலி தூதரக அதிகாரியாக போய் காதல் குறும்புகள் செய்கிறார்.
தந்தையை தேடி வந்த இடத்தில் இரு தாதாக்கள் பிடியில் சிக்கியதும் விறு விறுப்பு...
பிரபுவிடம் அடி வாங்கி பாசத்தை வெளிப்படுத்துவது அழுத்தம். கிளைமாக்ஸ் சண்டையில் அனல் பறத்துகிறார்.
தாதாவாக வரும் பிரபு கலக்குகிறார். குண்டுவீச்சில் கர்ப்பவதி மனைவியை இழந்து பரிதாபம் காட்டுகிறார். எதிரிகளுடன் மோதுவதில் இடி வேகம். பரத்தை வெறுக்கும் சனாகான் விமானம் ஏறியதும் காதலை சி.டி. மூலம் வெளிப்படுத்துவது கவித்துவம். மடால் ஷா வந்து போகிறார். கோல் கொண்டல்ராவாக வரும் எம்.எஸ். பாஸ்கர் மற்றும் விவேக் காமெடி வயிற்றை புண்ணாக்குகிறது. தலைவாசல் விஜய், பிரம்மானந்தம், லட்சுமணன், சரண்யா, யுவராணி ஆகியோரும் உள்ளனர். பத்ரி இயக்குகிறார்.
முதல் பகுதி கதை அழுத்த மின்றி நகர்கிறது. சில சீன்களில் கத்தரி போட்டு இருக்கலாம். தரண் இசையில் பாடல்கள் கதையோடு ஒட்டாமல் வேகத்தடை போடுகின்றன. சாலை சகாதேவன் ஒளிப்பதிவில் பிரமாண்டம்.
No comments:
Post a Comment