Ads

exclusivemails.net

Saturday, March 13, 2010

தொட்டவனால் துவண்ட மாணவி...


தொட்டவனால் துவண்ட மாணவி
மும்பை போன்ற பெருநகரங்களில் என்னதான் நாகரீகம் வளர்ந்து தழைத்திருந்தாலும், பெண்களுக்கு எதிரான தொந்தரவுகளையும் அவர்கள் சந்திக்க வேண்டியிருக்கிறது. தீப்ஷிகாவுக்கும் அந்தமாதிரியான தொல்லை ஏற்பட்டபோது என்ன செய்தார், அந்த கயவனுக்கு தண்டனை வாங்கிக் கொடுப்பதற்காக என்னென்ன தடைகளை தாண்டினார் என்பதை அவரே சொல்கிறார்...
``பட்ட மேற்படிப்புக்காக நான் மும்பை வந்தேன். இங்கே `பேயிங் கெஸ்ட்'டாக இருந்து படித்து வருகிறேன். ஒருநாள் எங்கள் கல்லூரியில் நடந்த கலை விழாவில் கலந்து கொண்டு, இரவு 9.30 மணியளவில் தங்கியிருந்த இடத்திற்கு செல்வதற்காக பேருந்து பிடிக்க... சாலையைக் கடந்தபோது இரண்டு பெண்களும் என்னோடு வந்தார்கள். அவர்கள் இருவரும் மிகவும் பயத்துடன் காணப்பட்டார்கள். என்னவென்று காரணம் தெரியாமல் நானும் பேசாமல் இருந்து விட்டேன். அவர்கள் சென்ற பின்னர்தான் எனக்கு தெரிந்தது. எங்களை ஒருவன் பின்தொடர்ந்து வந்து கொண்டிருப்பது.
அந்த இரண்டு பெண்களும் சென்றதும், என்னிடம் வந்தான் அவன். போதையில் இருந்த அவன் பேசிய வார்த்தைகளை எனது வாழ்க்கையில் நான் கேட்டதே இல்லை. காது கூசும் வார்த்தைகளை எல்லாம் பேசினான். பின்னர் என்னை ஒருவிதமாக பார்த்தபடி கையைப் பிடித்து இழுத்தான். நான் கையை உதறிக்கொண்டு வேகமாக ஓடிவிட்டேன். பின்னர் அருகில் இருந்த பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தேன். அங்கே வந்த அவன், என்னை கெட்ட வார்த்தைகளால் திட்டினான். அவனிடம் நான் சண்டை போட்டேன்.பின்னர் அங்கே நின்ற சிலர் என்னையும், அவனையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர்.
போலீஸ் நிலையத்துக்கு சென்ற பின்னர், நான் பட்ட மனத்துயரத்திற்கு அளவே இல்லை. ஒரு இளம்பெண்ணிடம் பேசக்கூடாத, கேட்கக் கூடாத கேள்வியெல்லாம் போலீசார் என்னிடம் கேட்டனர். அங்கே அனைவருமே மராத்தி மொழியில் பேசினர். எனக்கு மராத்தி மொழி தெரியாததால் கொஞ்சம்கூட புரியவில்லை. அவர்களிடம் இந்தி யில் பேசுமாறு வேண்டினேன். உடனே அவர்கள், முதலில் மராத்தி மொழியை கற்றுக் கொண்டு வருமாறு திட்டினர். மேலும் அவனிடம் முறையான விசாரணை எதுவும் நடத்தாமல் என்னை குழப்புவ திலேயே குறியாக இருந்தனர். அதுமட்டுன்றி எப்.ஐ.ஆர் எதுவும் போடாமல், சம்பவம் நடந்த இடம் வேறு போலீஸ் நிலையத்திற்கு உட்பட்டது என்று மற்றொரு காவல் நிலையத்துக்கு அனுப்பி விட்டனர். அப்போது நேரம் நள்ளிரவு 1.30 மணி.
அங்கே சென்றால், அவர்களும் இதே பல்லவியை பாடினர். திரும்ப திரும்ப என்ன நடந்தது என்று என்னையே கேட்டனர். இங்கும் எப்.ஐ.ஆர். போடவில்லை. பின்னர் நான் சத்தம்போடவே வேறு வழியின்றி மராத்தி மொழியில் வழக்கை பதிவு செய்தனர். நான் இந்தியில் எனக்கொரு காப்பி வேண்டும் என்று கேட்டேன். அதற்கும் மறுத்துவிட்டனர். அந்த நடுராத்திரியில் நான் எங்கே செல்வது, எப்படி செல்வது? என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தேன். பின்னர், ஒரு போலீஸ்காரர் என்னை மோட்டார் சைக்கிளில் கொண்டுவந்து வீட்டில் சேர்த்தார்.
அதன்பின்னர், நான் எந்த கல்லூரி, எங்கே தங்கியிருக்கிறேன் என்பதை தெரிந்து கொண்டு அவனுடைய ஆட்கள் மூலம் என்னை மிரட்ட முயற்சித்தான். ஆனால் நான் பயப்படவில்லை. கோர்ட்டில் ஆஜராகி நடந்ததை கூறி விட்டேன். கூடிய விரைவில் அவனுக்கு தண்டனை கிடைத்துவிடும் என்று நம்புகிறேன்'' நம்பிக்கையுடன் பேசுகிறார் தீப்ஷிகா.
இந்த மாதிரியான பிரச்சினைகள் வந்தால் என்ன செய்ய வேண்டும் என்று விளக்குகிறார் பிரபல வழக்கறிஞர் ஒருவர். ``சாலையில், பொது இடங்களில் பெண்களுக்கு இந்த மாதிரியான தொல்லைகள் ஏற்பட்டால், அந்த இடத்திலேயே அதை எதிர்நோக்க வேண்டும். முடிந்தால் திருப்பி தாக்குதல் நடத்துவது நல்லது. ஏனென்றால் சட்டத்தில் விதிமுறைகளும் பெண்கள் தங்களை தற்காத்துக் கொள்ளலாம் என்றுதான் சொல்கிறது. தீப்ஷிகா தனக்கு தொல்லை ஏற்பட்டபோது காவல் நிலையத்திற்கு சென்றது சரிதான்.
ஆனாலும் அவர், அந்த கயவனை பிடித்து, அங்கிருந்து காவல் நிலையத்திற்கு தகவல் சொல்லியிருந்தால் கண்டிப்பாக போலீசார் அங்கே வந்து விசாரித்து வழக்கை பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கும். பெண்களுக்கு தொல்லை ஏற்பட்ட உடனேயே அவர்கள் தங்களுக்கு தெரிந்த நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு தகவல் கொடுக்க வேண்டும். அதன்மூலம் போலீசாருக்கு நெருக்கடியை கொடுக்கலாம். அருகில் இருக்கும் ஆண்கள் மற்றும் பெண்களை உதவிக்கு அழைக்கலாம். உடனடியாக போலீசுக்கு நீங்கள் தகவல் கொடுத்தால் அதைப் பார்த்து சம்பந்தப்பட்ட நபர் அந்த இடத்தை விட்டு ஓடி விடலாம். இல்லாவிட்டால் அந்த நபரை பிடித்து வைத்துக் கொண்டு போலீசுக்கு தகவல் கொடுக்கலாம்'' என்கிறார்.
பிரபல சைக்கியாடிரிஸ்ட் கூறும்போது, ``இன்றைக்கு இருக்கும் சூழ்நிலைக்கு, பெண்கள் அனைவரும் தற்காப்புக் கலைகளை கற்றுக் கொள்வது நல்லது. மேலும் சேப்டி பின், பெப்பர் ஸ்பிரே, சிறிய கத்தி மற்றும் கத்திரிக்கோல் போன்ற சின்ன சின்ன ஆயுதங்களை கைவசம் வைத்திருப்பது நல்லது. மேலும் நீங்கள் எங்கே இருக்கிறீர்களோ அந்த இடத்துக்குரிய `லோக்கல் பாஷை'யை கற்றுக் கொள்ளுங்கள். அப்படி மொழி தெரியாத பட்சத்தில் போலீசாரிடம் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் முதல் தகவல் அறிக்கையை கேளுங்கள். யாரிடம் பேசினாலும் தயக்கம், பயமின்றி பேசுவது முக்கியம். குறிப்பாக அழுது புலம்பாமல் இடத்துக்குத் தக்கவாறு அந்த பிரச்சினையை சமாளிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். இதற்கு மனப்பக்குவம் மிகவும் அவசியம்'' என்கிறார்.
Download As PDF

1 comment:

Kandumany Veluppillai Rudra said...

நாட்டுக்குத் தேவையான பதிவு.

Popular Posts